செவ்வாய், 14 ஜூலை, 2020

மரணம் - ஒரு மாயத்தோற்றம். Death - A magical illusion.

              

                                                 credit: third party image reference

நாம் சுவாசிக்கிறோம் என்று சொல்லலாம், ஆனால் நாம் வாழ்கிறோம் என்று கூற முடியுமா?

சாவு அழகானதாக இருக்கும், மக்கள் உயிரொடு இருந்தால் – ஓஷோ

(வெற்றுப் படகு)   பக்கம் 17

இப்பொழுது சொல்லுங்கள் யார், யார் வெறுமனே சுவாசிக்கிறார்கள், யார், யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று. தயங்காமல் சொல்கிறேன் நான் சுவாசித்து  கொண்டு  மட்டுமே இருக்கிறேன். நாம் எப்போது வாழத் தொடங்குகிறோம்.

யார் வாழத் தொடங்குகிறார்கள்? யார், யார் சுவாசிக்க மட்டுமே தொடங்குகிறார்கள்? சாதனை செய்தால் மட்டுமே சரித்திரத்தில் இடம் பிடிப்போம் என்று இல்லை. சாதாரண நிலையிலும், “சாதகமாக இருந்தால் மட்டுமே நியாயமாக நடப்பேன்” என்று இல்லாமல், அசாதாரண சூழ்நிலையிலும் “நான் நானாகத்தான் இருப்பேன்” என்பதும் சாதனைதான். யாரும் பிறந்ததிலிருந்தே சுயநலகாரர்களும் கிடையாது, சாதனையாளர்களும் கிடையாது. சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் ஒருவனை சாதனையாளனாக மாற்றுகிறது, வேறொருவனை சந்தர்ப்பவாதி ஆக மாற்றுகிறது. கர்மா, விதி என பல தரப்பாக வாழ்க்கையை பிரித்தாலும், நன்றாக யோசித்து பார்த்தால் நாம் எடுக்கும் முடிவுகள்தான் நம்மை ஒவ்வொரு நாளும் பின்தொடர்ந்து வரும்.

நான் சிறுவயதில் ஒரு கட்டுரையில் எழுதினேன்

காய்கறி வெட்டும் பொழுது, தெரியாமல் கத்தி கையில் பட்டு

உதிரம் கொட்டும் பொழுதுதான்!

நான் உயிரோடு இருப்பதாக உணர்கிறேன். என்று.  

ஒரு கிராமத்திற்குள் 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருக்கிறாள். அப்போது ஒரு பெண்மணி மற்றொரு பெண்மணியை பார்த்து “யார் இந்த பெண்?  என கேட்கிறார். அதற்கு அந்தப் பெண்மணி “இந்தப் பிள்ளையை தெரியாதா? நம்ம -------,அக்கா பொண்ணு என்கிறாள். யார்? என்று கேள்வி கேட்ட அந்த பெண்மணி “முப்பது வருடத்திற்கு முன் ஒரு ---- சம்பவத்தால் இறந்துபோன அந்தப் பெண்மணியின் மகளா? என கேட்கிறாள். ஆமா அவளேதான். அவங்க அம்மா சிரிச்சா! அப்படி இருக்கும். ஒருநாள் ரோட்டில் போகும்போது காலில் இரும்பு குத்திடுச்சு, வீட்டுக்கு கூட்டிட்டு போய் மருந்து வச்சது மட்டும் இல்லாம, அவங்க அண்ணன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து ஏதோ டிடியா? கீ டியா? அந்த ஊசி போட சொன்னாங்க. அந்த மனுஷனும் காசு வாங்காம ஊசி போட்டார்” என்றாள். “அந்த அக்காவை பத்தி தான் நல்லா தெரியுமே. சரி. . .  இந்த பிள்ளை என்ன பண்ணுது?” எனக் கேட்டாள். “அது தெரியல இந்தப் பக்கமா போகும், வரும் அவ்வளவுதான்” என்றாள். இப்பொழுது கூறுங்கள் தாய்-மகள் இரண்டு பேரில் யார் வாழ்ந்து கொண்டிருப்பது? யார் நடைபிணமாக திரிந்து கொண்டிருப்பது? என்று. எப்பொழுது மனிதன் வாழத் தொடங்குகிறான். இரண்டு சம்பவங்கள் மூலமாக பார்ப்போம்.

சம்பவம் 1

                                            credit: third party image reference

ஒரு பேருந்தில் இரு மனிதர்கள் சண்டை போட்டுக்கொண்டே சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவனின் தங்கையை இன்னொருவன் திருமணம் செய்துள்ளான். பெண் எடுத்தவன் மிகவும் கோபமாக கத்துகிறான்.” வண்டியை விட்டு வெளியே இறங்கி, முதல் வேலையாக, உன்னை கொல்லாமல் விடமாட்டேன்” என கத்துகிறான். பெண் கொடுத்தவன் “நீ ஏதோ தெரியாமல் பேசுகிறாய். நீ நினைக்கிற மாதிரி நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் உன்னை ஏமாற்றவில்லை” என திரும்பத் திரும்ப தன் நிலையை விளக்கிக் கொண்டே இருக்கிறான். “உன் தங்கையை, உன் வீடு அனுப்பி விடுகிறேன். நீயே அவளை பார்த்துக்கொள். துரோகிகளை என்னால் கூட வைத்துக் கொண்டு வாழ முடியாது” என சப்தமிட்டு கூறுகிறான். அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, பேருந்து ஒரு பாலத்தில் இருந்து உருண்டு கீழே விழுகிறது. செங்குத்தான பாலம் ஆதலால் மருத்துவ அவசர ஊர்தி ஏறி இறங்குவதற்கு சிரமப்படுகிறது. காப்பாற்றுபவர்கள், கீழிருந்து துாக்கு படுக்கை(stretcher) வைத்து ஒவ்வொருவராக தூக்கிச் சென்றார்கள். தன்னைவிட தன் மச்சானுக்கு, அதாவது பெண் எடுத்தவனுக்கு அதிகம் ரத்தம் போவதை பார்க்கிறான் பெண் கொடுத்தவன். தன்னை காப்பாற்ற வந்தவர்களைப் பார்த்து கூறுகிறான் “எனக்கு ஒன்னும் இல்ல. என் மச்சான காப்பாத்துங்க” என கத்துகிறான். மச்சானை தூக்கி படுக்கையில் படுக்க வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தனது மச்சானை பார்த்து “நீ குடிச்சிட்டு காச செலவழிக்கிறன்னு, என் தங்கச்சி தான் லாபமா வந்த காசை பேங்க்ல போட சொல்லுச்சு. உன் பொண்டாட்டி பேருல தான் அந்த காசு இருக்குது. நான் அஞ்சு பைசா எடுக்கல. ஒருவேளை எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என் தங்கச்சி உன் தங்கச்சி(பெண் கொடுத்தவனின் மனைவி) ரெண்டு பேரையும் பாத்துக்க என கத்தினான். காப்பாற்றுபவர்கள், பெண் எடுத்தவனை அவசர ஊர்தியில் அனுப்பி விட்டு, திரும்பி வந்து பார்த்த பொழுது பெண் கொடுத்தவன் உயிரோடு இல்லை.

இந்த சம்பவத்தில் உண்மையிலேயே உயிர் இழந்தவன் யார்?  உயிர் வாழ்பவன் யார்?

சம்பவம் 2

நாலாவது நிலை புற்றுநோயால் போராடிக்கொண்டிருக்கும் ஒரு மனைவி. அடுத்தகட்ட சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல இருக்கும் கணவனிடம் உறவினர்கள் “இங்க பாருடா பத்து சதவிகித குணமாகும் தன்மை தான் உனது மனைவியின் நோய்க்கு இருக்கிறது. ஆனால் நீ செலவழிக்கப் போகிறது உன் வாழ்க்கையின் மொத்த சம்பாத்தியத்தையும், மற்றும் சொத்துக்களையும். எல்லாவற்றையும் இவளுக்கு செலவழித்து முடித்துவிட்டால்? அவள் உயிரோடு வந்து விட்டால் பரவாயில்லை. ஒருவேளை சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால்? உன் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்? என அறிவுரை கூறிக் கொண்டிருந்தனர். கொஞ்சம் கூட யோசிக்காமல் கணவன் கூறினார்

                                           credit: third party image reference

“இன்பத்திலும் - துன்பத்திலும், உயர்விலும் – தாழ்விலும், சுகத்திலும்- துக்கத்திலும், மரணம் நம்மை பிரிக்கும் வரை” அப்படி என்று அவளை கை பிடிச்சுட்டு, இப்ப என்னால முடியாது. நீ பாதியிலே போ  அப்படின்னு சொன்னா என்ன அர்த்தம்” என்றான். உறவினர்களை பேசி அனுப்பிவிட்டு, மனைவியின் அறைக்குள் வந்தான். மனைவி குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருந்தாள் “அம்மாவுக்கு வலிக்குது தூங்குறேன்” எனக் கூறிக் கொண்டிருந்தாள். குழந்தைகள் அம்மாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அறையை விட்டு வெளியே சென்றார்கள். கணவன் வலி மாத்திரையை எடுக்க விழைந்த போது “வேண்டாம், தானாகவே தூக்கம் வருகிறது. வலியும் சற்று குறைந்த மாதிரி இருக்கிறது. தூங்குறேன். இடையில  எந்திரிச்சேன்னா மாத்திரை சாப்பிடுகிறேன்” எனக்கூறிவிட்டு தூங்கச் சென்றாள். அவள் ஏற்கனவே தாங்க முடியாத வலியையும் வேதனையையும் அனுபவித்து இருந்ததால், நீண்ட இளைப்பாறுதல்அடைந்தாள்.

கணவனுக்கு பாரமாக இல்லாத வகையில், மனைவி அவன் மனதில் வாழ ஆரம்பித்தாள். மனைவியை எந்த வகையிலும், எந்த நிலையிலும் கைவிடமாட்டேன் என்று அவன் கடவுளின் சன்னிதானத்திற்கு முன் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றி அவன் மனித தெய்வமாக வாழ ஆரம்பித்தான்.

நம் எல்லோருக்குமே வாழ்வதற்கும், வாழ ஆரம்பிப்பதற்கும் ஒரு தருணம் கொடுக்கப்படுகிறது. அதில் நாம் எடுக்கும் முடிவுகள் தான், நாம் வாழ்கிறோமா அல்லது நடைபிணமாக திரிகிறோமா என்கின்ற வாழ்வின் நோக்கத்தை நோக்கி நகரச் செய்கிறது. .

நான் மிகவும் விரும்பி வாசிக்கும் விவிலியத்தில் இவ்வாறாக

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் 

(2 தீமோத்தேயு 4:7)

பவுல் என்கின்ற அப்போஸ்தலரால் கூறப்பட்டுள்ளது.

மரணம் என்பது ஒரு மாயத்தோற்றம் ஏனென்றால் பலர் மரித்த பின்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சிலர் வாழ்ந்து கொண்டிருந்தாலும் வாழ்கின்ற அடையாளம் அல்லது வாழ்கின்ற சுவடே இல்லாமல் உலாவிகொண்டிருகின்றனர். இதைத்தான் பாரதியார்

தேடிச் சோறுநிதந் தின்றுபல
சின்னஞ் சிறுகதைகள் பேசிமனம்
வாடித் துன்பமிக உழன்றுபிறர்
வாடப் பலசெயல்கள் செய்துநரை
கூடிக் கிழப்பருவ மெய்திகொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும்பல
வேடிக்கை மனிதரைப் போலேநான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?

எனக் கூறுகிறார். நாம் வாழ்கிறோம் என்ற அடையாளத்தை உருவாக்குவோம்.


5 கருத்துகள்: