புதன், 24 ஜூன், 2020

Self respect - unaffordable (தன்மானம் - சிலருக்கு கட்டுப்படி ஆவதிவில்லை)

        Image by ArtTower from Pixabay 


ரத்தின பாண்டி மருகி, மருகி நின்றான் . “என்ன பாண்டி வியாழக்கிழமை தான ஆகுது. அதுக்குள்ள என்ன தலையை சொறிஞ்சி கிட்டு நிற்கிற? எனக் கேட்டார் முதலாளி துரைசாமி. “ஒன்னும் இல்லீங்க ஐயா, திருவிழாக்கு போனும், அதான் சம்பள பணம் முன்னமே வேணும்என்றான் ரத்தின பாண்டி. திருவிழா நாளைக்கு தானே ஆரம்பிக்குது. இப்பவே சம்பளம் கொடுத்தால் நாளைக்கு நீ வேலைக்கு வரமாட்டே, நாளைக்கு சாயந்தரம் வேலைய முடிச்சுட்டு போகும்போது சம்பளம் வாங்கிக்கஎனக் கூறினார் துரைச்சாமி. வேலை முடிந்ததும் வீட்டிற்கு சென்றான். வீட்டு வாசலிலேயே மனைவி, மகன் மற்றும் மகள் உட்கார்ந்து இருந்தார்கள். மகள் ஆர்வமுடன் கேட்டாள்அப்பா புது துணி வாங்க போலாமா?” என்று. இல்ல கண்ணு முதலாளி வீட்ல இல்ல, நாளைக்கு அப்பா வேலை முடிச்சுட்டு வந்து, திருவிழாக்கு போய் புது துணி வாங்கிக் கொள்ளலாம் என கூறினான். அதற்கப்புறம் வெகுநேரமாக குழந்தைகள் அழுது கொண்டே இருந்தார்கள். மனைவியின் நொய், நொய் என்ற கரைச்சல் வேறு. மனைவி உச்ச ஸ்தானத்தில் கத்தினாள், தனது இயலாமையை எண்ணி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அமைதியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அந்த இரைச்சலுக்கு நடுவிலே, போனால் போகுது என்று மனைவி சாப்பாடு போட்டாள். சாப்பிட்டு முடித்த பின், மீண்டும் அவள், அவனது இயலாமையை சுட்டிக்காட்ட தொடங்கினாள், காலையிலிருந்து மம்பட்டி பிடித்து வேலை செய்த களைப்பு வேறு. அவளது அர்ச்சனை - இவனது கலைப்பு, இரண்டும் போட்டி போட்டதில் இவனது களைப்பே வென்றது. எப்பொழுது தூங்கினான் என்று தெரியாமல் தூங்கிவிட்டான். மறுநாள் காலையில் எழுந்து வேலைக்கு சென்றான் போகும்போதே முதலாளியிடம் ஐயா திருவிழாவுக்கு போகணும் சம்பளம் வேண்டும். மறந்துடாதீங்க எனக் கூறிவிட்டு சென்றான். “ தரேன் தரேன் என்றார் துரைசாமி. சாயந்திரம் 4 மணிக்கு வயலை விட்டு வெளியே வந்தான். முதலாளியின் வண்டி வீட்டில் இல்லை. ஒருகணம் தூக்கிவாரிப் போட்டது. வெளியில் நின்று முதலாளியம்மாவை கூப்பிட்டான். அம்மா, ஐயா சம்பளம் தரேன்னு சொன்னார், உங்ககிட்ட குடுத்துட்டு போனார்களா? என்று கேட்டான். “இல்லை. ஐயா வெளியில போயிருக்காங்க 7 மணிக்கு வருவாங்க. அப்புறமா வந்து வாங்கிக்கோ என்றாள். ஒரு கணம் மனம் இடிந்து போனான். நேற்றைய தினம் மகளின் கண்ணீரும், மகனின் கண்ணீரும், மனைவியின் ஆதங்கமும், ஒரு கணம் மனதில் வந்து போனது. அங்கேயே ஓரமாக ஒரு திண்டில் உட்கார்ந்துவிட்டான். சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்த முதலாளியின் மனைவி வாரம், வாரம் தான காசு வாங்கறிங்க ஒருநாள் பின்னாடி வாங்கினால் என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க. உங்க காசை வச்சி அவரு என்ன கோட்டையா கட்ட போறாரு?. இன்னிக்கி இல்லைன்னா நாளைக்கு வாங்குறது. எதுக்கு இப்படி வெளியே உட்கார்ந்து, உயிர வாங்குற பாக்குறவங்க எல்லாரும் எங்களை என்ன நினைப்பாங்க என்றார். அமைதியாக எழுந்து நின்று தலைகுனிந்து நின்றான். அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள். நான் உழைத்து, நான் என் வியர்வை சிந்தி, என் உழைப்புக்கு தகுதியான காசை நான் வாங்குவதற்கு இவர்களிடம் என்ன பேச்சு கேட்க வேண்டியது இருக்கிறது என அங்கலாய்த்தார். அவனுக்கு கேட்க ஒரு நிமிடம் ஆகாது நான் வட்டிக்கா காசு கேட்கிறேன், இல்ல சும்மா கைமாத்துக்கு கேட்கிறேனா. வாராவாரம் இப்படியா கேட்கிறேன்இந்தவாரம் ஏதோ அவசரம், பொண்டாட்டி, பிள்ளையோடு திருவிழா போக வேண்டி இருக்கு. நான் உழைச்ச காசு அதை கேட்டால், இந்த பேச்சு பேசுறீங்களே? என கேட்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அவன் அப்படி கேட்டு விட்டால், முதலாளியம்மா முதலாளியிடம் கூறுவாள். முதலாளி, “வேலை செய்ற பயலுக்கு இவ்வளவு திமிரா? சம்பளத்தை பிறகு வந்து வாங்கிக்கோ. நாளையிலிருந்து வேலைக்கு வர வேண்டாம். ஒழுங்கா யாரு காசு தராங்களோ, அங்க போய் வேலை பாத்துக்க என கூறிவிட்டால் நாளை திருவிழாவும் போச்சு, அடுத்த வாரம் சோறும் போச்சு. இந்த சண்டை போட்டது எல்லாருக்கும் தெரிஞ்சா? அப்புறம் ஒரு பைய ஊருக்குள்ள வேலை தர மாட்டான். அவன் தன் தன்மானத்திற்கு தீனி போட்டால் அவனும் அவன் குடும்பமும் சில வாரங்களுக்கு சாப்பிட முடியாது. ரத்ன பாண்டி போன்றவர்களுக்கு, தன்மானம் கட்டுப்படி ஆகவே ஆகாது.

ரத்ன பாண்டி போன்ற படிக்காத ஏழைகளுக்கு தான் தன்மானம் கட்டுப்படி ஆகாது என்றால் படித்த சிலருக்கும் தன்மானம் கட்டுப்படியாகாது.


லிவிங்ஸ்டன் ஒரு கன்ஸ்டிரக்ஷன் மேனேஜர், கடின உழைப்பாளி, டிப்ளமோ படித்துவிட்டு பிடெக் (B.Tec) படிக்காமலேயே கன்ஸ்ட்ரக்சன் மேனேஜராக உயர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு சுத்தம். முதலாளிகள் மேல் அவ்வளவு மரியாதை. புது கட்டிட பிராஜெக்ட் ஒன்று போய்க்கொண்டிருந்தது, திடீரென மேலாளர் அழைத்தார். அவரது அலுவலகத்திற்கு உள் நுழைந்த போது மேலாளர் மற்றும் கிளையன்ட் (வாடிக்கையாளர்கள்), பின் இவனது ஜூனியர்கள் என ஏழு, எட்டு பேர் அமர்ந்திருந்தனர். உள்ளே சென்றவுடன் மேலாளர் உச்சஸ்தானத்தில் கத்த ஆரம்பித்தார் என்ன லிவிங்ஸ்டன் இது சொன்ன வேலையை விட்டுட்டு, என்ன வேலை பண்ணி வச்சிருக்கீங்க? இன்னைக்கு கிளையன்ட் என்னை நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேக்குறான். நீயா பதில் சொல்ற? வேலை செய்ய தெரிஞ்சா வேலையில இருங்க. இல்லனா வேலை வேண்டாம்னு எழுதி கொடுத்துட்டு போய்க்கிட்டே இருங்க. இந்த மாதிரி ஓவர் ஸ்மார்ட் வேலை எல்லாம் பண்ணாதீங்க. இந்த சின்ன பயலுகளுக்கு இருக்கிற அறிவு கூட உங்களுக்கு இல்லை. வயசு ஆக, ஆக அறிவு வளரும் இப்படி தேய்ந்துகொண்டே போக கூடாது. உங்கள எல்லாம் கன்ஸ்டிரக்ஷன் மேனேஜர் ஆக்கி வச்சிருக்காங்க பாருங்க இந்த கம்பெனி அத்தாரிட்டிஸ், அவங்கள சொல்லணும். என்று அவர் திட்டிக்கொண்டே இவன் என்ன தவறு செய்தான் என்று குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட விஷயம் லிவிங்ஸ்டனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தப் பிராஜெக்ட் மேனேஜர்தான் போனமாதம் கூப்பிட்டு, ஒரிஜினல் திட்டத்திலிருந்து மாறாக இப்படி செய்தால் நன்றாக இருக்கும். செய்து பாருங்கள் என கூறியது ஞாபகத்திற்கு வந்தது. அங்கே அத்தனை பேர் முன்னிலையில் நீங்க சொன்ன பிளான் தான் சார், நான் சுயமாக எதுவுமே செய்யவில்லை என அவனால் கூறி இருக்கக்கூடும். ஆனால், அங்கே அவன் தலைகுனிந்து, அவர் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். தன்மானம். அவனை எவ்வளவோ பேசுவதற்கு தூண்டியது. ஆனால் அவன் தன்மானத்தின் பேச்சைக் கேட்கவில்லை. அவன் அன்று தன்மானத்தின் பேச்சைக் கேட்டால், டிப்ளமோ குவாலிபிகேஷன் இருக்கிறவங்க மேனேஜர் ஆக முடியாது என முதலில் அவனது பதவி பறிக்கப்படும். பின்னர் இந்த மேனேஜரால் கண் வைக்கப்பட்டு பணி மாற்றம் செய்யப்படும். ஒருவேளை கோபத்தில் இந்த கம்பெனியிலிருந்து வெளியே போனால்? இதைவிட மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேர நேரிடும். லிவிங்ஸ்டன் போன்றோருக்கும் தன்மானம் வாழ்வில் கட்டுபடியாகாது.

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் இது பொருந்தும். அகல்யா, தயங்கி தயங்கி அண்ணனின் வீட்டு கதவை தட்டினாள். அண்ணன்தான் கதவை திறந்தார் வாம்மா உள்ள என்றார். தயக்கத்துடன் நாற்காலியின் நுனியில் அமர்ந்தாள். இரும்மா வரேன் என்று கூறிவிட்டு உள்ளே போனார்.  அகல்யாவின் கணவனுக்கு சிறிது நாளைக்கு முன்பு மூளையில் ஒரு சிறிய கட்டி தோன்றியது.கையில் வைத்திருந்த சேமிப்பு எல்லாம் வைத்து அவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அதை எடுத்தாகிவிட்டது. அவன் திரும்பவும் பழைய நிலைக்கு வந்து வேலைக்கு செல்ல இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். அதுவரை அவனது மருத்துவச் செலவுகளை  இன்ஷூரன்ஸ் பார்த்துக்கொள்கிறது. குழந்தைகளின் படிப்பு செலவுகளையும்,சாப்பாட்டு செலவுகளையும் அவள் ஆங்காங்கே சிறிது வேலைகள் செய்து பார்த்துக் கொள்கிறாள். அதையும் மீறி சில செலவுகள் வரும்போது அண்ணன் வீட்டிற்கு வருவாள். அண்ணன் எதுவுமே பேசமாட்டார். ஆனால் அண்ணியின் பார்வை சற்று கடுமையாகவே இருக்கும். தங்கையின் முகத்தை கண்டு பணத்தேவை உள்ளது, என அண்ணன் உள்ளே போய் பணம் எடுக்கச் சென்ற வேளையில், அண்ணி வெளியே வந்தாள். என்ன அகல்யா காபி குடிச்சிட்டியா? என்றாள் குடிக்கின்றாயா? என்று கூட கேட்கவில்லை. எப்படி இருக்காரு? உன் வீட்டுக்காரர் எனக் கேட்டாள். இப்படியே போனா, வேலைக்கு திரும்ப சேருவாரா? சேர மாட்டாரா? ஏன்னா, அண்ணனும் இப்ப கொஞ்சம் பணக் கஷ்டத்துல இருக்காங்க. நீ வேற, வந்து இப்படி காசு வாங்கிட்டு போனா நாங்க என்ன செய்வது. எத்தனை நாள்தான் அந்த மனுஷன் உங்க குடும்பத்துக்கே உழைச்சி கொட்டுவார். என பேச ஆரம்பித்தாள். ஊரைத் தாண்டி ரோட்டோரம் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை தங்கைக்கு பங்கு கொடுக்காமலேயே அண்ணன் வைத்துள்ளார். அவளுக்கு திருமணம் செய்யும் பொழுது வெறும் 20 பவுன் போட்டு திருமணம் செய்து முடித்து வைத்தார். “வாழ்க்கை ஏறக்குறைய இருந்தா, என்னைக்கு என்னிடம் வாஎன வாக்கு கொடுத்தார். கல்யாணம் ஆன நாளிலிருந்து, அவளது கணவரின் உடல் நலம் குறையும் நாள் வரை, அண்ணன் வீட்டு வாசற்படிக்கு உதவி என்று வந்ததில்லை. அவரது மருத்துவச் செலவுகளையும் இன்சூரன்ஸ் பார்த்துக் கொண்டதால், அவர் உடல் நலம் குறைவு பட்ட நிலையிலும் அண்ணனிடம் கையேந்த வில்லை. அவளும் படித்து உள்ளதால் பகுதி நேர வேலைகள் பார்த்து சம்பாதிப்பதால் சாப்பாட்டுக்காகவும் அண்ணனிடம் கையேந்த வில்லை. இப்பொழுது லாக்டவுன் ஆரம்பித்துவிட்டதால், இரண்டு மாதங்களாக வேலை இல்லை. வேறு வழியின்றி அண்ணனிடம் இரண்டு மாதங்களாக வருகிறாள். அண்ணனின் வேலைக்கு எந்த பாதிப்பும் இல்லாததால், அண்ணனுக்கு மாதமாதம் சம்பளமும் வருவதால், அண்ணன் எந்த மனக் கசப்பும் இல்லாமல், தங்கைக்கு உதவி வருகிறார். “செண்டு 50,000 ரூபாய்க்கு விக்குது. நீங்க ரெண்டு ஏக்கர் நிலத்தை வச்சிருக்கீங்க. எனக்கு நகை போட்டது போக மிச்ச நிலத்தை எனக்குத் தந்தா நான் இப்படி கையேந்த வேண்டியது இருக்காது என அண்ணியிடம் கேட்க ஆசை. ஆனால் அவள் கோபத்தில் உங்கள் தங்கைக்கு இனி பணம் கொடுக்கக் கூடாது என சொல்லிவிட்டால்? நிலம் வேண்டுமா? கோர்ட்ல கேஸ் போட்டு எடுத்துக்க என சொல்லிவிட்டால்? நாளை அவள் வீட்டு அடுப்பு எரியாது. பணக்காரர்களுக்கும், பதவியில் உள்ளவர்களுக்கும் இரவு 12 மணிக்கு கூட கோர்ட் விழித்திருக்கும். அகல்யா போன்றோருக்கு, 12 வருடம் ஆனாலும் தீர்ப்பு வராது. எல்லாவற்றையும் அறிந்ததால் அமைதியாக அண்ணியிடம் கூறினாள் சீக்கிரத்தில் குணமாகும். அவர் சீக்கிரத்தில் வேலைக்கு போக ஆரம்பித்து விடுவார். நாங்க ரொம்ப நாள் உங்களுக்கு சுமையாய் இருக்க மாட்டோம் என்றாள். எப்பத்தான் இந்த மனுஷன் தனக்கென வாழ போறாரோ? என கூறிக் கொண்டே உள்ளே சென்றாள். உள்ளறையில் இருந்து வந்த அண்ணன்,  அவளிடம் காசு கொடுத்துவிட்டு அண்ணியின் பேச்சை மனசில் வெச்சுகாதே. உனக்கு என்ன வேணுமோ என்கிட்ட வந்து கேளு என்றான். இந்த இடத்தில் பணத்தேவைக்காக மட்டுமல்ல, அண்ணனின் பாசத்திற்காகவும் அகல்யாவிற்கு தன்மானம் கட்டுப்படி ஆகவில்லை.

 

பணத்தேவை மட்டும்தான் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள தடையாய் இருக்கிறதா? என்றால்,  அதுவும் சரியல்ல. நாளையத் தலைவன், தன்மானத்தின் சிகரம் என அழைக்கப்பட்ட அந்த அரசியல்வாதி கோபத்துடன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். எங்கடா அந்த காக்கா? எனக்கேட்டார். காக்கா என்கின்ற  குமார் ஓடிவந்தான். என்ன தலைவரே என்றான், “ ஏண்டா பொதுக்கூட்டத்திற்கு போற வழியில, மூணு ஊர்ல ஒரு பேனர், ஒரு போஸ்டர் கூட இல்லை. என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க? எதிர்க்கட்சி காரன் எல்லாம் பார்த்து சிரிக்கிறான். என அசிங்கமாக திட்ட ஆரம்பித்தார். அவனது ஜாதியை இழுத்தார். அவளது குடும்பத்தை இழுத்தார். என்னமோ அவர் தான் அவனுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி திட்டிக்கொண்டே போனார். அவர் திட்டிக் கொண்டிருக்கும் போது குமாரின் மனதில், போஸ்டர் அடிக்க காசு கொடுக்கவில்லை, பேனர் வைக்க காசு கொடுக்கவில்லை, எத்தனை நாள்தான் சொந்த காசியிலேயே எல்லாம் செலவழிப்பது. எனக்கும் பிள்ளை குட்டிகள் இருக்குல்ல. புனைப்பெயர் மட்டும் தன்மான சிங்கம் என வைத்துக்கொண்டு அடுத்தவன் காசை ஆட்டையை போடுவதை குறியாக வைத்திருப்பவர்கள் ஏன் கட்சி நடத்த வேண்டும்?” என மனதிற்குள் திட்டிக் கொண்டான். தனக்கு மட்டும்தான் தன்மானம் இருக்குமா? தன்னோடு இருப்பவர்களுக்கும் தன்மானம் இருக்கும். என்ற எண்ணம் கூட இல்லாத இவனெல்லாம் என்ன தன்மானத் தலைவன் எனவும் மனதிற்குள் எண்ணிக் கொண்டான். எல்லாத்திட்டையும்  வாங்கி முடித்தபின் சரிங்கய்யா அடுத்தவாட்டி ஒழுங்கா பண்ணிடுறேன் எனக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். இந்த இடத்தில் அவன் தன் தலைவனிடம் காசு எதிர்பார்க்கவில்லை, அவன் கட்சியை நம்பி சோறு சாப்பிடவில்லை, அவனுக்கு ஏன் தன்மானம் கட்டுப்படி ஆகவில்லை? ஒருவேளை அடுத்த தேர்தலில் கவுன்சிலர் சீட் கேட்க அவன் நினைப்பதனால் இருக்குமோ??

                                            Photo by Matese Fields on Unsplash

பெரியவர்களுக்குத்தான் இந்த நிலை என்றால் இன்றைய இளைஞர்களுக்கும் இதே நிலைதான். அது ஒரு கல்லூரி,  தேர்வுகள் நெருங்கும் நேரம் இன்டர்னல் மார்க் போடும் சமயம் அது. பேராசிரியர் திட்டிக் கொண்டிருந்தார் ஏன்டா, என்னடா பேப்பர்ல எழுதறீங்க? மார்க் போடுற மாதிரியா டா எழுதறீங்க? படிப்பு வரலைன்னா எருமை மாடு மேய்க்க போ. இல்லன்னா மளிகை கடை வைக்க வேண்டியதுதானே. எதுக்குடா காலேஜ்ல சேர்ந்து எங்க உயிரை வாங்குறீங்க? ஊர்ல உள்ள முட்டாப் பய எல்லாம் எனக்குதான் ஸ்டுடென்ட்டா இருக்கான். என இஷ்டப்படி திட்டிக் கொண்டிருந்தார். திட்டு வாங்கிக் கொண்டிருந்த மாணவனின் மனதில், இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்த காலேஜ்ல படிச்சு முடிச்சிட்டு, வேற வேலை கிடைக்காமல், அதுக்கு மார்க் பத்தாம இந்த காலேஜிலேயே லக்சரர் வேலையில சேர்ந்து இருக்கிறவன் நீ, புக்குல உள்ளதை அப்படியே கட், காப்பி, பேஸ்ட் பண்ணி ஓ ஹெச் பி ல்ல ஓட விட்டு பாடம் எடுக்கிறவன் நீ.  இதுவரை ஒரு தியரி கூட எக்ஸ்ப்ளைன் (விரிவாக்கம்) பண்ணினது கிடையாது. நீ எல்லாம் பேசி, நான் திட்டுவாங்க வேண்டிருக்கு. என அவனுக்கு கேட்க ஆசை. ஆனால் இன்டர்னல் மார்க்கில் அவன் கை வைத்து விட்டால்? என்ற பயம். எக்ஸாம்ல அரியர் வந்துச்சுன்னா கூட அட்டம்ட் வச்சு பாஸ் பண்ணிடலாம். ஆனால் இன்டர்னல் மார்க்கில் கை வச்சுட்டா இவன் பின்னாடி அலைகிறதை கனவுல கூட நினைச்சு பார்க்க முடியல. அந்த இடத்தில், அந்த மாணவனுக்கும் தன்மானம் கட்டுப்படி ஆகவில்லை.

                                        Image by Pexels from Pixabay 

சிறுவர்களின் நிலை இன்னும் கொடுமையானது. தன்மானம் என்றால் என்ன? என தெரியும் முன்னே பல சிறுவர்கள் அதை இழந்து விடுகின்றனர். டீக்கடையில் எச்சில் டம்ளர் கழுவும் சிறுவன், டாஸ்மார்க்கில் சைடிஷ் பரிமாறும் சிறுவன், பத்து பாத்திரம் தேய்க்கும் அம்மாவோடு கூட செல்லும் 8 வயது சிறுமி, டிராபிக் சிக்னலில் கையேந்தி பிச்சை கேட்கும் சிறுவர்-சிறுமிகள் இவர்கள் எல்லோரும் எந்த வகையில் எல்லாம் அசிங்கப்படுத்த படுகிறார்கள் என்று நான் தனியாக கூறத்தேவையில்லை. இவர்கள் எல்லோரும் தன்மானம் என்றால் என்ன? என புரிந்துகொள்ளும் முன்பே அதை இழந்து விடுகிறார்கள் வெகுசிலரே வெகுண்டெழுந்து தன்மானத்தை மீட்டு எடுக்கிறார்கள். பலர் அது என்னவென்று தெரியாமலே தங்கள் வாழ்க்கையை முடித்துவிடுகிறார்கள்.

மனைவிக்காக, குழந்தைக்காக, தாய்க்காக, தகப்பனுக்கு, கணவனுக்காக, அண்ணனுக்காக, நண்பர்களுக்காக, என அடுத்தவருக்காக தனது தன்மானத்தை இழந்து, அல்லது தன்மானத்தை காக்க முடியாமல் தவிக்கும் யாரையாவது நம் வாழ்வில் பார்த்தால்! நம்மால் அவர்கள் தன்மானத்திற்கு இழுக்கு வராமல் நடந்துகொள்வோம்.

எனக்குத் தன்மானம் தான் முக்கியம். அதைக் காத்துக் கொள்வதற்காக, நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என கூறுபவர்கள் என்ன அடைந்தார்கள் எதை இழந்தார்கள் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.


3 கருத்துகள்: