வியாழன், 25 ஜூன், 2020

இவர்கள் இல்லை என்றால்?..... வெறுப்பின் மத்தியில்!


credit: third party image reference

கடந்த சில வருடங்களாக நாம் அங்கே.. இங்கே என கேட்டுக்கொண்டிருந்தது, இன்று நம் மத்தியில் விஸ்வரூபமாக எடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும் இல்ல இந்த அராஜகம்.  அமெரிக்காவின் ஜார்ஜ் ஃபிலாய்ட் இல் இருந்து, இந்தியாவின் கடைக்கோடிக்கு அருகில் இருக்கிற சாத்தான்குளத்தில் நமது அண்ணாச்சி ஜெயராஜ், பெனிக்ஸ் வரை, நம் கண் முன்னால் இழைக்கப்பட்டு  கொண்டிருக்கும் இந்த அராஜக, அநீதியை பற்றித்தான் பேச விரும்புகிறேன். கட்டுரை எழுத ஆரம்பிக்கும் முன்பே சொல்லிவிடுகிறேன். எனது குடும்பத்தில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் இருக்கின்றனர். ஒன்று எனது சொந்த சகோதரி. இன்னொன்று எனது சகோதரனின் மனைவி. இரு ஆய்வாளர்களை வீட்டில் வைத்திருந்தாலும், எப்பொழுதுமே காவலர்களை பார்த்தால் ஒரு பயம் கலந்த வெறுப்பு மனதில் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு காரணமும் இருந்தது. எனது அப்பா ஒரு காலத்தில் தன்னிடம் உதவி கேட்டு வரும் படிக்காதவர்களுக்கு மனு எழுதிக் கொடுப்பார். சிலசமயங்களில் அவர்கள் கூட சென்று காவல்துறையில் அதிகாரிகளிடத்தில் அதை ஒப்படைக்கவும் செய்வார். சில நேரங்களில் அவரது காரில் நானும் சென்றிருக்கிறேன். என் அப்பா என்னை வண்டியில் உட்கார வைத்து விட்டு தனியாகத்தான் செல்வார். அப்படி நான் அவர் கூட செல்லும்போது, நான் பார்த்த ஒரு விஷயம் என்னவென்றால்? அந்த இடத்தில் அப்பாவை பற்றி தெரிந்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்ததால் அப்பா உள்ளே நுழைந்ததும் வந்துட்டான்யா என்பதுபோன்ற எதிர்வினை எல்லார் கண்களிலும் இருக்கும். அந்த அதிகாரிகளின் காதுகளில் இது அந்த அம்மாவோட அப்பா என எனது அக்காவின் பெயரைச் சொன்னதும், சிறுது மரியாதை கொடுத்து, நாற்காலியில் அமர வைத்து, அந்த மனுவை வாங்குவார்கள். இதனாலேயே பலர் அடிக்கடி அப்பாவை தேடி வருவார்கள். ஒரு கட்டத்தில் அப்பாவிற்கு வயதாகவே, அண்ணனின் ஆலோசனைக்கேற்ப பொது காரியங்களில் தலையிடாதீர்கள் என கூறிவிட்டதால், உடம்பும் அதற்கு ஒத்துழைக்காமல் போகவே எனது அப்பா இப்பொழுது காவல் நிலையத்திற்குஅடிக்கடி செல்வதில்லை. ஆனால் ஒவ்வொரு முறை அப்பா சந்திக்கும் காரியங்களை கூறும் போது சாதாரண ஒரு மனு கொடுப்பதற்கே அன்னாரது தகப்பனார் என்ற அடையாளம் தேவைப்பட்டால்? ஒரு சாமானியனின் எந்த ஒரு பின்புலமும் இல்லாதவன் எவ்வாறு தனது காரியத்தை நிவர்த்தி செய்து கொள்வான்?’ என்கின்ற எண்ணம் எப்பொழுதுமே என் மனதில் உண்டு.

இன்றைய சினிமாக்களில் கூட கதாநாயகன் காவல் அதிகாரியாக இருந்தால் மட்டுமே அவனை நல்லவனாக காட்டுவதும், கதாநாயகன் அல்லாத வேறு எந்த பாத்திரத்தில் காவல் துறை அதிகாரி வந்தாலும் அவனை 80 சதவிகிதம் கெட்டவராக காட்டுவதும் நம் மத்தியில் வாடிக்கையாகிவிட்டது. பத்திரிகையில் கூட தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற காவல் துறை என சின்னதாக போடுவதும், காய்கறி கடையில் லஞ்சம் வாங்கிய போலீசார் என அவர்கள் செய்த தவறை கொட்டை எழுத்தில் போட்டு முழு பக்கம் அச்சடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.  இன்றும் நம் ஊர் வழியாக செல்லும் ராணுவ வீரர்கள் ஊர்தி எங்கேயாவது நின்றால், ராணுவ வீரர்களிடம் பேசி விட மாட்டோமா? அவர்கள் கூட சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டோமா? என நினைக்கும் இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்கள் நாட்டின் எல்லையை காப்பவர்கள். அவர்கள் மேல் உள்ள அந்த மரியாதை, நம்முடைய, நம் வீட்டை, நம் தெருவை, நம் ஊரை காக்கும் காவலர்கள் மேல் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. பயம் இருக்கிறது. அதனால் ஒருவேளை நாம் மரியாதை கொடுக்கலாம். ஆனால் மனதில் இருந்து மரியாதை கொடுப்பது என்றால்? இப்பொழுது மக்கள் மத்தியில் அது சிறிது குறைந்தே காணப்படுகிறது.

ஒருமுறை எங்கள் ஊர் அருகே உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில், இரவு 9 மணிக்கு கடைசி பேருந்துக்காக காத்திருக்க நேரிட்டது. அப்பொழுது அங்கே ஒரே ஒரு டீக்கடையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அங்கே இரண்டு காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். காவலர்களை பார்த்தவுடன் மனதிற்கு நிம்மதி வர வேண்டிய சூழ்நிலையில் நான் இருந்தாலும், பயமே தோன்றியது. பகலில் ஒரு நாளும் அந்த பயம் வந்தது கிடையாது. ஒருவேளை நம்மை அழைத்து இந்த நேரத்தில் ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் எனக்கு கேட்டு விடுவார்களோ? அதில் ஒரு காவல்காரர் திரும்பத் திரும்ப என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஒருவேளை நான் தனியாக நின்றதால் எனக்கு காவலாக கூட அவர்கள் நின்றிருக்கலாம். ஆனால் என் மனதில் ஒரு இனம் புரியாத பயம் யாராவது கூட வந்துவிட மாட்டார்களா என்று. யாரோ இரண்டு கயவர்கள் மத்தியில் நின்று கொண்டிருப்பது போன்ற ஒரு பயம். ஒரு வெறுப்பு. நல்லவேளையாக அந்த நேரத்தில் இன்னொரு குடும்பம் பேருந்து ஏற வந்ததால், அந்த பயமான சூழ்நிலை விலகி நெஞ்சில் மனதில் நிம்மதி பிறந்தது. ஒரு தவறும் செய்யாது இருக்கையில் ஏன் அவர்களிடம் பயம் வருகிறது? என்னிடம் அந்தக் கேள்விக்கு விடையே இல்லை.

credit: third party image reference

இருபத்தி மூன்றாம் தேதி ஜூன் மாதம் 2020 ஆம் வருடத்தில் திரு ஜெயராஜ், திரு பெனிக்ஸ் அவர்களின் மரணத்திற்குப் பின் நடந்த போராட்டத்தில் நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்து நிறைய பேர் வலை தளத்தில் பதிவேற்றி இருந்தார்கள். ஒரு வீடியோவில் ஒரு பெண்மணி போலீசாரிடம் வேண்டுகோள் வைத்துக்கொண்டிருந்தாள். அது என்ன வேண்டுகோள் என்றால்? நாங்கள் ஊர்மக்கள் எல்லோரும் எழுதித் தருகிறோம். எங்கள் ஊரிற்கு காவல்நிலையம் வேண்டாம் என்பதுதான் அது. அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காகவே காவல் நிலையமே தவிர, அவர்களை அடித்து கொலை செய்வதற்கு அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் கூறிய விஷயத்திலிருந்து ஒன்றை மட்டும் நான் கூற விரும்புகிறேன். காவல் நிலையங்கள் இல்லாமல் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வரத்தானே செய்தோம். அந்தக் காலத்தில் முறை, முறையாக சிலர் காவல் பணியில் ஈடுபட்டு வந்தனர். குற்றங்கள் எல்லா காலகட்டத்திலும், எல்லா சமுதாயத்திலும் இருக்கத்தான் செய்யும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் நம் அனைவருக்குமே தெரியும். அது உண்மையும் கூட என பலவாறு சிந்தனை ஓடியது. ஒரு சிறு கூட்டத்தை, ஒரு சிறு கூட்ட மக்கள் பாதுகாக்க முடியும் ஆனால் நகரங்கள், பேரூராட்சிகள், காஸ்மோபாலிட்டன், மெட்ரோபாலிட்டன், என்று வரும்பொழுது காவல்நிலையம் இல்லாமல் சமாளிக்க முடியாது என்பதுதான் உண்மை. ஆனால் மக்கள் மத்தியில், காவல்நிலையங்கள் எங்களுக்கு வேண்டாம் என்ற உணர்ச்சி மேலோங்க தொடங்கினால் என்னவாகும்? இப்படி பலவாறு யோசித்தபடியே இருந்ததில் தலை வலிக்க ஆரம்பித்து விட்டது. கண் முன்னால் நடக்கும் கொடூரங்களுக்கு நம்மால் என்ன செய்ய முடிகிறது? குறைந்தபட்சம் பேஸ்புக்கில் ஷேர் செய்கிறோம். அதிகபட்சம் லைவ் வீடியோவில் பேசி வைரலாக செய்கிறோம். முன்னதில் மனதிருப்தி.` வீடியோ ஷேர் செய்வதில் பணம் சம்பாதிக்கலாம் இதை இரண்டைத் தவிர, களத்தில் இறங்கி போராடுபவர்களுக்காக நாம் என்ன செய்கிறோம்? எந்த எண்ணமும் மேலோங்கி நின்றது. மொத்தத்தில் காவலர்கள் மீது ஒரு வெறுப்பு.

அந்த வெறுப்பின் உச்சியில் தூங்க முயன்று கொண்டிருந்தேன். நாளை இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும். முடிந்த அளவு காவலர் முகத்திரையை கிழிக்க வேண்டும். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்துகொள்ள வேண்டும், என எண்ணிக்கொண்டே, அதை எப்படி எழுதலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். நேற்று இரவு அதாவது 24 ஆம் தேதி ஜூன் மாத இரவு, எனது கணவர் வேலை நிமித்தமாக வருவதற்கு தாமதமாகும் என கூறியிருந்தார். நான் எனது குழந்தைகள் இருவரையும் படுக்க வைத்துக் கொண்டு இவ்வாறு யோசித்துக்கொண்டிருந்தேன். இரவு ஒன்றரை மணி அளவு இருக்கும். இரண்டு - மூன்று இருசக்கர வாகனங்கள் வீட்டின் பின்னே மெதுவாக வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சில அசாதாரண சத்தங்களும் கேட்டன. இரவு ஒன்றரை மணிக்கு யார் வருகிறார்கள் என யோசித்துக்கொண்டே இருக்கும்போது! மெதுவாக பயம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. ஏனென்றால் கணவர் வீட்டில் இல்லை குழந்தைகள் உறங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இரவு மணி இரண்டு நெருங்கிக்கொண்டிருந்தது. சில பூச்சிகளின் ஓசைகளை தவிர வேறு எந்த ஓசையும் இல்லாத அந்த இரவு நேரத்தில், மனிதர்களின் காலடியோசை மனதை கலங்க செய்தது. மெதுவாக எழுந்து, இறைவனிடம்  ஜெபித்துக் கொண்டே தரையில் மண்டியிட்டு ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்த்தேன். நான் எட்டி பார்த்த அந்த கணமே பெரிதாக அலறல் குரல் கேட்டது. உண்மையில் சொல்லப் போனால் யாரோ, யாரையோ கொலை செய்வது போன்ற அலறல் கேட்டது.  ஒரு நிமிடம் இருதயம் துடிப்பது நிறுத்தியது போன்று இருந்தது. இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு ஓடி விடலாமா என தோன்றியது. இருந்தாலும் இருக்கிற தைரியத்தை எல்லாம் திரட்டிக்கொண்டு மீண்டும் ஜன்னலின் ஓரம் வழியாக எட்டிப்பார்த்தேன். அந்த சத்தத்திற்கான காரணம் தெரிந்தது. முதலில் வெறும் அலறல் சத்தம் வந்ததால் மனம் கலங்கியது. ஆனால் அதன் காரணத்தை கண்டவுடன் மனதிற்கு நிம்மதி வந்தது. இரண்டு போலீசார் அந்த மூன்று நபர்களை அடித்து இழுத்துச் சென்று கொண்டு இருந்தனர். அந்த நிமிடத்தில் அந்த இரண்டு போலீசார்களை கண்டபொழுது ஓடிச்சென்று அவர்களைப் பிடித்து கதறி அழ வேண்டும் போலிருந்தது. வண்டி சத்தம் கேட்ட அந்த நிமிடத்தில் இருந்து போலீசாரை காணும்வரை ஐந்து நிமிடங்களாக இருந்தாலும், வாழ்க்கையில் மறக்க முடியாத - ஐந்து நிமிடங்களாக அது அமைந்துவிட்டது. இந்த நபர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள்? வீட்டின் உள்ளே நுழைந்தால் நாம் என்ன செய்வோம்? குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளை எழுப்பலாமா? வேண்டாமா? படுக்கையறை கதவை சாத்தி உள்ளே தாள் போடலாமா? வேண்டாமா? யாரோ மூன்று பேர் என் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள் என காவலர்களுக்கு தெரிவிக்கலாமா? தெரிவிக்க வேண்டாமா? என ஆயிரம் கேள்விகள் எழுந்தது. மனம் பயத்தில் உறைந்தே போனது என்று கூட சொல்லலாம். வேலையில் இருக்கும் கணவனுக்கு தெரிவிக்கலாமா? தெரிவிக்க வேண்டாமா? கண்டிப்பாக அங்கே இருந்து கொண்டு அவரால் ஒன்றும் செய்ய முடியாது. அவரையும் ஏன் பயமுறுத்த வேண்டும்? என அவருக்கு அழைக்க யோசித்துக் கொண்டிருந்த போது, இந்த காவலர்களை கண்டதும் நான் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை. அவர்கள் திருடர்களா இல்லை போலீசை கண்டு என் வீட்டின் அருகே ஒதுங்கினார்களா? என்ற கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை. போலீசார் அவர்களை இழுத்து சென்ற போது நிறைய வீடுகளில் விளக்கு எரிந்தது. ஒருவழியாக அந்த சம்பவம் நடந்து முடிந்தது. எல்லாம் முடிந்தபின், என் கணவனை தொலைபேசியில் அழைத்து நடந்தவைகளை ஒரு சம்பவமாக கூறினேன். செய்தி கேட்டதும் உடனே கிளம்பி வந்தார். அதை பற்றி சில நேரம் பேசிவிட்டு தூங்க சென்றோம். அதன்பின் நடந்த காரியங்களை மனம் அசை போடத் தொடங்கியது. ஒருவேளை அந்த மனிதர்கள் திருடர்களாக இருந்திருந்தால்? எங்கள் வீட்டை திருடுவதற்காக வந்திருந்தால்? காவலர்கள் இல்லாது இருந்திருந்தால்? எங்களது நிலை என்னவாயிருக்கும் மறுநாள் காலையில் பத்திரிக்கையில் என்ன செய்தி வந்திருக்கும். என் கணவர் எங்களை உயிரோடு பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம். இன்று இந்த கட்டுரையை நான் எழுதுவது இறைவனின் சுத்த கிருபையினால் மட்டுமே. ஒருவேளை காவலர்கள் மேல் உள்ள எனது வெறுப்பை மாற்றுவதற்காக கூட இந்த சம்பவம் நடந்திருக்கலாம். இதிலிருந்து பல்வேறு பாடங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். அதில் ஒன்றை மட்டும் இப்பொழுது எழுத விரும்புகிறேன். அரைத்த மாவையே அரைப்பது போல இருந்தாலும், இதை நான் கூறியாக வேண்டும் எனது சகோதரி காவல்துறையில் வேலை செய்வதினால் நான் இதை கூறவில்லை, என்பதை கண்டிப்பாக புரிந்து கொள்ளுங்கள். காவலர்கள் நமக்குத் தேவை. காவல்நிலையங்கள் நமக்கு தேவை. ஆனால் காவல்துறையில் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும். காவலர்களின் வேலைப்பளுவினால் அவர்களுக்கு உண்டாகும் மன அழுத்தம் குறைக்க, அவர்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதை அறிந்து வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும். மருத்துவத்துறையில் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரேடியேஷன் தெரபி துறையில் வேலை பார்க்கும் மருத்துவ ஊழியர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை ரேடியேஷன் எக்ஸ்போஷர் என்ற டெஸ்ட் எடுக்கப்படும். அதேபோல் சமுதாயத்தில் பரவிக்கிடக்கும் குற்றம் என்கிற புற்றுநோயை அகற்றும் பிரிவில் வேலை பார்க்கும் காவலர்கள், தங்களது வேலை நேரத்தில் பெரும்பான்மையான பகுதிகளை குற்றவாளிகள் உடனே செலவழிப்பதால், அவர்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அவர்களது மனப்பான்மை ( Attitude) மற்றும் உளவியல் ரீதியான சோதனைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டால், சில சைக்கோ தனமான காவலர்கள் உருவாக மாட்டார்கள். பொதுவாக குடும்பத்தோடு வெகு நேரம் செலவழிக்கும் போது மன ரீதியான போராட்டம் குறைக்கப்படும். பொதுமக்களையும், பிற மனிதர்களையும் மனிதர்களாக பார்க்கும் தன்மை கூட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் காவலர்களின் பதவிக்கு கொடுக்கும் மரியாதையை தனக்குத்தான் கொடுக்கிறார்கள் என்று எண்ணும் சில காவலர்களால் தான் இதுபோன்ற அநியாய செயல் நடைபெறுகிறது.

( "With great power comes great responsibility", the Peter Parker principle

"பெரும் சக்தியுடன் பெரிய பொறுப்பு வருகிறது",

பீட்டர் பார்க்கர் கொள்கை, ஸ்பைடர் மேனால் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு பழமொழி .

என்ற கூற்றிற்கு ஏற்ப பதவியில் உள்ளவர்கள், அரசாங்க பொறுப்பில் இருப்பவர்கள், தங்கள் சக்தியை மிகக்கவனத்துடன் கையாள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


2 கருத்துகள்: